இத்தொகுப்பின் கதைகள், சிங்கப்பூரின் சாதாரணப் பெண்களின் வாழ்வனுபங்களைச் சித்திரிப்பவை; அவர்கள் பற்றிய மாறுபட்ட பார்வையைத் தருபவை. பத்து வயது அலிசா, முப்பது வயது நீலமலர், அறுபது வயது சீனலட்சுமி, சுதந்திரப் போராட்ட வீராங்கனை, ஆய்வாளர் அனா, என்பது வயது ஆத்தா போன்ற நவீன பெண்களின் வெவ்வேறு அடையாளங்களை நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. மீள்திறன் மிக்க இக்கதாபாத்திரங்கள் தங்கள் அடையாளங்களைத் தேடுபவர்கள், கண்டடைபவர்கள், உருவாக்குபவர்கள், சிதைப்பவர்கள்.

Cheenalakshumi

This collection of short stories depicts the lives and life experiences of everyday Singapore women from a different perspective. The stories subtly convey forth the different identities of modern females. The women flounder, tumble and are cleaved apart by age, time, class, and thoughts. Yet these resilient characters are in a neverending quest to constantly search, discover, crush, and re-construct their identities. This read offers different snapshots of Singapore through time, history, landscape, culture, and perspectives. From queuing to feeding cats, from mothers who do the unthinkable to grandmothers who yearn for the impossib these stories by Latha showcase the quirks, glorious imperfections and simplicity of Singapore and its people.

பகுதி | Excerpt

தண்ணீருக்கு அடியிலிருந்த மண்ணை இப்போது அலிசாவால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்த மண்ணுக்குள் படிந்திருந்த பல வடிவங்களிலான கற்களையும், ஓடுகள், சிப்பிகளையும் அவற்றை மறைத்து வளர்ந்திருந்த தாவரங்களையும் அலிசா மனதுக்குள் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தாள். முன்பு அவள் வீட்டு மீன்தொட்டியில் அவ்வாறான செடிகள் இருந்தன. ஆனால் அவை பிளாஸ்டிக்கால் ஆனவை.
அந்தக் குளத்துத் தண்ணீரைப் போலவே தாத்தாவும் அசைவற்று இருந்தார். சற்றுமுன் அவள் வீட்டுக்கு அதிகாரிகள் வந்ததும் பாட்டி அழுததும் அவர் முகத்தில் எந்தச் சுவடும் இல்லாமல் இருந்ததை ஏமாற்றமாக உணர்ந்தாள். பாட்டியை நினைத்தால் பாவமாக இருந்தது. அந்த வீட்டை விட்டுப் போகமாட்டோம் என்று பாட்டி சொன்னபோது தாத்தா சாவகாசமாக வெளியேறிக்கொண்டிருந்தார்.
தாத்தாவின் வலது முழங்காலில் முட்டுக்கொடுத்து வைத்திருந்த வலது கையும் அது பிடித்திருந்த தூண்டிலும் அசைவற்றே இருந்தன. இடது கை சிகரெட்டை வாயில் வைப்பதும் எடுப்பதுமாக ஒரே சீராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. கனமான நீளத்தூண்டிலில் தொங்கிக்கொண்டிருந்த மெல்லிய நைலான் நரம்பு மட்டும் அவ்வப்போது சற்று வேகமாக வீசிய காற்றில் மிக சன்னமாக அசைந்துகொடுத்தபடி இருந்தது.

தலையைத் திருப்பித் தாத்தாவை நேராகப் பார்ப்பதைவிட, நீரில் தெரிந்த அவரின் பிம்பத்தைப் பார்ப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. நீருக்கடியில் கொக்கிப் புழுவை உற்று நோக்குவதும் பிறகு சட்டென்று நீரின் மேல்பரப்புக்குப் பார்வையைத் திருப்புவதும் பரபரப்பான உணர்வை அவளுக்கு அளித்தது.

எங்கிருந்தோ தேங்காய் ஒன்று விழுந்ததில், நீரின் அமைதி குலைந்தது. கரையிலிருந்து சற்றுத் தள்ளி சிறு குமிழி தோன்றி, அதைச் சுற்றிலும் வட்ட வட்டமாக மெல்லிய கோட்டலைகள் எழுந்தன. தாத்தா உடலில் அசைவு தெரிந்தது.

முழங்காலில் ஊன்றியிருந்த கையைச் சிறிதும் அசைக்காமல், தூண்டிலை மட்டும் லேசாகத் தணித்து, மேலே இழுத்தார். பிறகு பக்கவாட்டமாக, அலிசாவின் பக்கம் திருப்பினார். தூண்டிலின் வாயில் நீளமான மீன் படபடவென்று வாலை அடித்தபடி துள்ளிக் கொண்டிருந்தது.

“கெளுத்தி. பாட்டிக்குப் பிடிக்கும்.”

அப்போது அலிசா அவர் முகத்தைப் பார்த்தாள். கண்கள் மட்டும் விரிந்திருந்தன. இடது கையால் தூண்டில் நரம்பை அவர் அருகே இழுத்துப் பிடித்துக்கொண்டே, வலது கையிலிருந்த தூண்டில் பிடியைக் கீழே வைத்தார். பக்கத்தில் வைத்திருந்த துணியை எடுத்துத் தூண்டிலில் துள்ளிக்கொண்டிருந்த நீளமான அந்த மீனின் முன்துடுப்புப் பகுதியில் பிடித்தார். அது துள்ளுவது நின்றது. வயிற்றுப் புறமாக திருப்பி, அருகிலிருந்த பிளாஸ்டிக் விரிப்பின்மீது போட்டார். தூண்டில் கொக்கி அதன் பக்கவாட்டில் செருகியிருந்தது. அதை சட்டென்று பிடுங்கி, மீனைப் பக்கத்திலிருந்த வாளிக்குள் அவர் போடுவதை அவள் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். கொக்கி மீனில் சிறு கீறலையும் ஏற்படுத்தாமல் அவர் லாவகமாகக் கழற்றியதையும், மீனை அவர் துடிக்கவிடாமல் அமைதிப்படுத்தியதையும் அவள் கவனித்தாள்.

இப்படித்தான் செய்யவேண்டும் என்று தாத்தா சொல்லித்தர மாட்டார். செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள தாத்தாவுடன் வசிக்கத் தொடங்கிய இந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே அலிசா பழகிக் கொண்டாள்.

தாத்தா தூண்டிலை அவள் முன் நீட்டினார். இம்முறை அவள் கொக்கியை அதில் மாட்டவேண்டும். அவசரத்தில் சரியாக வரவில்லை. வழுக்கியது. நைலான்  நரம்பை  பிடித்து, கொக்கியை    அதன் வாய்ப் பகுதியில் செருகும்போது, கொக்கியின் கூர்முனை அவள்  கையில் லேசாகக் குத்தி எரிந்தது. அதைக் கவனிக்க நேரமில்லை. அருகில் தாத்தா வைத்திருந்த சிறு குப்பியைத் திறந்து, அதற்குள் பழுப்பு நிறத்தில் ஒன்றுடன் ஒன்று ஏறியபடி, நெளிந்துகொண்டி ருந்த புழுக்களைப் பார்த்தாள். அதில் ஒன்றைக் கையால் எடுக்க வேண்டும் என நினைத்தபோது அவளுக்கு அருவருப்பாக இருந்தது.

கை நாறுமோ, வாந்தி எடுப்போமோ என விரல்களைப் பிசையத் தொடங்கினாள். தாத்தாவின் முகத்தைப் பார்த்தாள். எந்த உணர்வும் இல்லை. அவர் வாயிலிருந்து எழுந்த சிகரெட் புகை வளையங் களாகி, மேலெழுந்துகொண்டிருந்தது. கட்டைவிரலையும் சுண்டு விரலையும் சேர்த்து, விரல்களின் நுனிப் பகுதியால் புழுவை எடுத் தாள். அது வழுக்கித் தரையில் விழுந்தது. தாத்தா கோபித்துக்கொண் டாரோ என்று நிமிர்ந்து பார்த்தாள். தாத்தா மேலெழும் சிகரெட் புகையைப் பார்த்துக்கொண்டிருந்தார். தரையிலிருந்த புழுவை எடுக்கலாமா அல்லது வேறு புழுவை எடுப்பதா? தெரியவில்லை. தரையில் விழுந்தது நெளிந்து நெளிந்து நகரத் தொடங்கியிருந்தது. அதைக் கையால் இறுக்கிப்பிடித்து எடுத்து, கொக்கியில் மாட்டினாள். தாத்தா தூண்டில் நரம்பை நீருக்குள் வீசினார். இந்த முறை சில நிமிடங் களுக்குள்ளேயே ஒரு பெரிய விரால் மீன் சிக்கியது.

தாத்தா தூண்டிலை வெளியில் இழுத்து, அவள் பக்கம் நீட்டினார். அவள் தாத்தா செய்ததைப் போல் மீனைத் தூண்டிலில் இருந்து அதற்கு நோகாமல் எடுத்து அருகிலிருந்த தண்ணீர் வாளிக்குள் போட வேண்டும்.

தாத்தா நடுக்கடலுக்கு மீன் பிடிக்கப்போனால் இரவு நேரத்தில் பயணப்படுவார். குளத்தில் அல்லது கடலோரப் பகுதியில் மீன் பிடிப்பதாக இருந்தால் இருட்டுவதற்கு முன்னரே வீட்டுக்குக் கிளம்பி விடுவார். உபின் தீவில் சாலை விளக்குகள் இல்லை. தெருவெல்லாம் இருட்டாக இருக்கும். தாத்தாவின்  ‘பிக்-அப்’ வண்டியின் வெளிச்சத்தில்தான் பயணம் செய்ய வேண்டும். அது பழைய வண்டி. சிங்கப்பூரில் உடைப்பதற்காக வீசப்பட்டது. சிங்கப்பூரில் அதை ஓட்ட முடியாது. ஆனால் உபினில் ஓட்டலாம்.
மீன்கள் இருந்த வாளி, தூண்டில், தண்ணீர் பாட்டில் எல்லாவற்றையும் தாத்தா வண்டியில் ஏற்றினார். அலிசா பிளாஸ்டிக் விரிப்பை மடித்து எடுத்துக்கொண்டாள்.

அவள் ஏறி அமர்ந்து கதவைச் சாத்திக்கொண்டிருக்கும்போதே தாத்தா வண்டியை எடுத்துவிட்டார். புறப்படும்போது இருந்த குழப்பம் எதுவும் இல்லாதது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அங்கு வீடுகள் தள்ளித் தள்ளித்தான் இருக்கும். குளத்துப் பகுதியி லிருந்து அவர்கள் வீடு 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது.