ஆழிப்பெருக்கு
வெவ்வேறு கதைக்கருக்களை உள்ளடக்கிய 14 சிறுகதைகள் ஆழிப்பெருக்கு நூலில் இடம்பெற்றுள்ளன. பல்லின மக்கள் சேர்ந்து வாழும் சிங்கப்பூரில் உருவாகும் புதிய பந்தம்; நினைவாற்றலை சிறிது சிறிதாக விழுங்கும் முதுமை; குடும்பத்தைப் பிரிந்து கடல் கடந்து வாழ்பவர்களின் பிரிவுத்துயர்; தலைமுறையினருக்கு இடையிலான முரண்; உளவியல் பிரச்சினைகள் போன்றவற்றை மையமாகக்கொண்டு சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. சிறுகதைகளிலுள்ள பாத்திரப் படைப்புகளின் வழி, சம காலத்தில் வாழ்பவர்களின் ஆழ்மனக் கொந்தளிப்புகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
Azhiperukku
Azhiperukku consists of 14 short stories covering different social and psychological issues such as the new collective identity established in multiracial Singapore, the losing of our memories due to old age, the pain of being separated from families who are oceans away from us, and intergenerational conflict. The characters in these short stories reflect the inner turmoils of our society.
பகுதி | Excerpt
மருத்துவக் குழுவினர் என் படுக்கையைச் சூழ்ந்தனர். ‘பிளட் பிரஷர்’ கட்டுக்குள் வந்திருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்றும் தலைமை டாக்டர் சொன்னார். அதற்குப் பதிலாகப் புன்னகைக்க முயற்சி செய்தேன். முன்புபோல என்றால் உடனே வீட்டுக்குப் போனடித்திருப்பேன். இரண்டு நாட்களாக உறங்கும் கைபேசியின்மீது பார்வை சென்று மீண்டது. பூனைக்குட்டியைப்போலக் கால்களைச் சுற்றிச் சுற்றி வரும் பேரன் நகுலின் நினைவு அழுத்தத் தொடங்கியது. இலேசாகத் தலையை அசைத்து இளகத் தொடங்கிய மனத்தை இழுத்து நிறுத்தினேன்.
பக்கத்துப் படுக்கை ஆசாமியின்மீது பார்வை சென்று மீண்டது. ‘மறுமுனையில் இருப்பவங்களுக்கு மட்டும் பேசறது கேட்டா போதாதா? வீடியோ காலில் வேற பேசி மனுசன் உயிரை எடுக்கிறாரே!’
இந்த வார்டில் சேர்க்கச் சொன்னபோதே, “அங்க பிரைவசி இருக்காதும்மா” என்று மகன் சொன்னான். பத்திரமாகக் காக்கப்படும் அமைதி, சில சமயங்களில் அச்சத்தை விளைவிக்கவும் செய்யும் என்பதை உணரவியலாத வயது அவனுக்கு.
“நம்மைச் சுத்தி மனுசங்க இருக்காங்க என்ற நினைப்பே மனசுக்குத் தைரியமா இருக்கும்பா” எனப் பதிலளித்தேன்.
சென்ற முறை ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குப் போனபோது இனி உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு எல்லாவற்றையும் சரியாகக் கடைப்பிடித்து மறுபடி ஆஸ்பத்திரிக்கு போகவே கூடாது என்ற வைராக்கியத்தோடுதான் போனேன். மின்தூக்கியிலிருந்து வெளியே வந்தவுடன் காரிடாரின் மூலையின் வெறுமையில் மனம் துணுக்குற்றது.
“செம்பருத்திச் செடியை இடம் மாத்தி வச்சிட்டீங்களா?” பார்வை அவசரமாகப் தாங்காப்படிக்கு மேலே தாவியது. அங்கும் காணவில்லை. படிக்கட்டுகளுக்கு மேற்புறத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த செடிகளில் புதிதாக ஒரு மஞ்சள் வண்ண ரோஜாச்செடி இடம்பிடித்திருந்தது. என்ன நினைத்தும் என் முக மாற்றத்தை மறைக்க முடியவில்லை.
“அந்தச் செடியில வெள்ளை வெள்ளையா ஒரே பூச்சிம்மா... அப்படியே மத்த செடிங்களுக்கும் பரவிடப் போகுதுன்னு கீழ கொண்டு போய் வச்சிட்டேன்.”
நாற்பதாவது கல்யாண நாளுக்காக கணவர் எனக்குப் பரிசளித்த செடி அதுவென வீட்டிலுள்ளவர்களுக்கும் தெரியும். தனிமையெனும் இராட்சசனின் பிடிக்குள் சிக்கியிருப்பதை நான் உணர்ந்த நாள் அது.
“தன்னோட உடம்பைப் பாத்துக்க ஒருத்தரால முடியாதா? ஆம்புலன்ச கூப்பிட்டுப் பதறியடிச்சிக்கிட்டு ஒவ்வொரு முறையும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியிருக்கு...!”
“அதுகூடப் பரவாயில்ல. இவங்கள பார்க்கிறதுக்காக அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் வீட்டிலிருக்கிற புள்ளக்கி ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு வந்துட்டா...?”
வெறுப்பில் உதிர்ந்த சொற்களைக் கேட்டதிலிருந்து மனம் மேலும் நைந்தது. பக்கத்துப் படுக்கையிலுள்ள பாட்டியிடமிருந்து சிறு குறட்டை சத்தம் வந்தது. வயிறு சரியில்லாத மனிதர் வழக்கம்போலச் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். பதின்ம வயது பெண் கைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘காக்கி என்று உருகுவாளே, நண்பனின் நினைவு இவளுக்கு எப்படி இல்லாமல் போனது? யாருக்குமே அவனைப்பற்றிய அக்கறையே இல்லையா? இவர்களையே சுற்றி வந்தவனாயிற்றே!’
‘அந்நியர்களிடம் ஒரு சிறுவனால் இவ்வளவு இலகுவாகப் பழக முடியுமா? கீழே விழுந்த ஆரஞ்சுப்பழத் தோலை நோயாளி ஒருவர் கண்டுகொள்ளாமல்விட, ஓடிப் போய் எடுத்துக் குப்பைத்தொட்டியில் போட்டானே. அப்போதாவது அவனைப் பார்த்துப் புன்னகைத்திருக்கலாமோ? ஒவ்வொரு முறையும் அவன் அருகில் வரும்போதும் முகம் கொடுக்காமல் இருந்தேனே. அவன் உடம்புக்கு என்ன பிரச்சினைன்னுகூட இதுவரை கேட்கவே இல்லை என்பது நினைவுக்கு வந்தது. நம் நகுலைப்போலவே இங்கு ஒரு சிறுவன் இருக்கிறான் என மகனிடமும் மருமகளிடமும் சொல்ல நினைத்ததையும் இன்னும் சொல்லவில்லையே.’
தொடர்ந்து வீசும் காற்றினால் மேலெழும்பும் அலைகளின் முகப்புப்பகுதி சிதறி நுரைதிரளாகக் கரையை நோக்கி வேகமாக ஓடி வருவதைப்போல மனத்தில் டேரலைப்பற்றிய சிந்தனை வெடித்துச் சிதறியதில் நெஞ்சை அடைப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது.
‘அந்தப் பையன் எங்கேன்னு யாராவது கேக்கமாட்டாங்களா?’ பார்வை அங்குமிங்கும் அல்லாடியது. அவரவருக்குச் செய்வதற்கு வேலைகள் இருந்தனபோலும். மணி ஒன்பதாகிவிட்டது. இனியும் பொறுக்க முடியாதென எழுந்து நிற்க எத்தனிக்கையில் கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. நடுக்கத்துடன் படுக்கையிலுள்ள அழைப்பு மணியை அழுத்தினேன்.

ABOUT THE AUTHOR

மணிமாலா மதியழகன்
மணிமாலா மதியழகன், உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இனிய தமிழ்க் கட்டுரைகள் என்னும் நூலையும்; முகமூடிகள், இவள், பெருந்தீ, தேத்தண்ணி, ஆழிப்பெருக்கு ஆகிய சிறுகதைத் தொகுப்பு நூல்களையும்; வண்ண வண்ண ஆர்க்கிட், வாலோடு பிறந்தவன், கருப்பு வண்ணப் பூனை மற்றும் ஒற்றைக் கொம்பு குதிரை ஆகிய சிறுவர் பாடல் நூல்களையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளுக்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். 2022ஆம் ஆண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கு இவரது தேத்தண்ணி நூல் இறுதிப்பட்டியலுக்குத் தேர்வானது.
Manimala Mathialagan
Manimala Mathialagan’s previous works comprise Iniya Tamil Katturaigal, an essay collection for secondary school students in Singapore, and short story collections that include Mugamoodigal, Ival, Perunthee, Theathannee and Azhiperukku. She has also written children rhymes books, namely Vanna Vanna Orchid, Vaalodu Pirandhavan, Karuppu Vanna Poonai and Ottrai Kombu Kudhirai. She has received various local and international awards for her work. Her book Theathannee was shortlisted for the 2022 Singapore Literature Prize.
சிறு குறிப்புகள் மணிமாலா மதியழகன் | Short Notes with Manimala Mathialagan
"மனக்கண் வழியே" என்பதற்கு எழுத்தில் உங்கள் அர்த்தம் என்ன?
What does "Mata Hati | 心眼 | Eye of the Heart | மனக்கண் வழியே" mean to you in writing?
சமூகச் சிந்தனையும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளும் ஒரு படைப்பாளியின் மனக்கண் வழியே உலகிற்கு தெரிவிக்கப்படுகிறது.
"மனக்கண் வழியே" to me, is how a writer communicates to the world, about societal thinking, consciousness, and psychological issues, through his / her inner perception.
உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள் அல்லது திடீர் செயல்பாட்டு வெடிப்புகள் உள்ளனவா?
What does your writing process look like? Do you type or write? Are there multiple drafts, long pauses, or sudden bursts of activity?
தொடக்கத்தை மட்டும் எழுதிவிட்டு பிறகு தட்டச்சு செய்யத் தொடங்கிவிடுவேன். சில கதைகள் பல வரைவுகளுக்குப் பிறகு முழுமையடையும். திடீரெனத் தோன்றி எழுத வைக்கும் கதைகள் முதல் வரைவிலேயே முழுமையடையும்.
Typically, I start off with writing the prologue, and then continue to work on the story. Some stories are complete, after multiple drafts. Some stories, especially the spontaneous ones, are complete within the first draft itself.
உங்கள் வேலை செய்யும் இடம் எப்படி இருக்கும்?
What does your working space look like?
வீட்டின் கூடத்திலுள்ள கணினியில்தான் வேலை செய்வேன். சன்னல் வழி வருகிற இதமானக் காற்றுடன் பறவைகளின் கீச்சொலிகள் என் வேலைகளுக்குத் துணைபுரியும்.
I usually work on my stories, using the computer which is located at the living room in our house. The chirping of the birds, along with the gentle breeze coming through the window, creates a pleasant atmosphere and makes my work enjoyable.
தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் நூலிற்கு 30 வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளில் ஒரு சுருக்கமான உரை உருவாக்கவும்.
Make an elevator pitch for your shortlisted work in 30 words or less.
சமூக, உளவியல் பிரச்சினைகள் போன்ற வெவ்வேறு கதைக்கருக்களை உள்ளடக்கிய, சிங்கப்பூர்ச் சூழலில் எழுதப்பட்ட 14 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கதாபாத்திரங்களின் வழி, மனிதர்களின் ஆழ்மனக் கொந்தளிப்பு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
This book consists of 14 short stories covering different social and psychological issues, set in Singapore context. The characters in these short stories reflect the inner turmoil’s of our society.
இந்தப் படைப்பை எழுதும்போது ஒரு முக்கியமான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
Could you share a pivotal moment as you were writing this work?
மறதி நோயுள்ள வயதானவர், தன்னுடைய மனைவி இறந்து போனதுகூட அறியாமல் வீட்டுக்கு வந்தவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, உபசரித்ததை ஒரு துக்க வீட்டில் பார்த்தேன். மனைவி கடைக்குப் போயிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்றும் அவர் சொல்லிக்கொண்டிருந்தது என்னைப் பெரிதும் பாதித்தது. அந்த ஆழ்மன வலியின் வெளிப்பாடு, இந்நூலிலுள்ள ஒரு சிறுகதை உருவாக்க காரணமானது.
I had encounter at a grieving household, with an elderly man who had amnesia. Despite the loss of his wife, he was cheerfully welcoming and greeting the visitors, totally unaware of her passing. He was telling the visitors that his wife had gone out to the stores, and would return soon. I was deeply touched and affected by his tragic misunderstanding and underlying sorrow. This inspired the creation of one of the short stories in this book.
இந்தப் புத்தகத்தை எழுதும்போது உங்களுக்கு நீங்களே ஒரு அறிவுரை கூற விரும்பினால், அது என்னவாக இருக்கும்?
If you could give one advice to yourself when you were writing this book, what would it be?
ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கும்போது வெவ்வேறு கிளை கதைகள் மனத்தில் தோன்றும். செய்துகொண்டிருக்கும் வேலையை முதலில் முடித்துவிட்டு பிறகு அதைப் பார்க்கலாம் என நினைப்பேன். செய்த வேலை முடிந்தவுடன் நடுவில் தோன்றிய எண்ணங்களும் காணாமல் போய்விடும். அதனால் முக்கியமாக, சோம்பேறித்தனத்தை விட்டொழிக்க வேண்டும் என்பதே எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் அறிவுரையாகும்.
While writing a story, various subplots often surface in my mind. I will normally set aside these ideas, to revisit them later, and focus on finishing my current work. However, these fleeting ideas tend to dissipate and slip my mind over time. Therefore, essentially the advise that I would like to give myself, is to overcome procrastination and promptly jot down the ideas.