Winner of Creative Nonfiction in Tamil
அப்பன்
அப்பன் தொகுப்பில் நூலாசிரியர் தனது தந்தையைக் குறித்த நினைவுக்குறிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். தந்தை மகன் உறவு பற்றி இலக்கியத்தில் நிறையவே பேசப்பட்டுள்ளது. அந்த அளவுக்கே சிக்கலும் ஆழமும் கொண்ட தந்தை மகள் உறவைக் குறித்து விரிவாகவும் நேர்மையாகவும் இத்தொகுப்பு பேசியுள்ளது. வாழ்க்கை ஒட்டத்தில் ஒரு தனிப்பட்ட ஆளுமை அடையும் மாற்றங்களையும் ஒரு காலகட்டத்தின் கனவுகளையும் இத்தொகுப்பு காட்டிச்செல்வதோடு அக்காலகட்டத்தின் குடும்பச் சூழ்நிலை, சமூக யதார்த்தங்கள் மீதான பெண் பார்வையையும் பிரதிபலிக்கிறது
Appan
In Appan, the author delves into the intricate tapestry of father-daughter relationships. While literature often celebrates the bond between fathers and sons, this compilation explores the complexities and depth of the connection between father and daughter. Through personal anecdotes and shared dreams spanning various life stages, the essays illuminate the distinct perspectives of both father and daughter. Amidst life’s unpredictable twist and turns, this collection celebrates the enduring ties that bind generations together, providing glimpses into family dynamics, social expectations, and the dreams of a bygone era.
பகுதி | Excerpt
முப்பது நிமிடங்களில் அம்மாச்சி வீட்டை அடைந்தோம். வீட்டுக்குப் பக்கத்திலிருந்த மாட்டுக் கொட்டகை உத்தரத்தில் தாத்தா தூக்கில் தொங்கி இருக்கிறார். நாங்கள் சென்றபோது அவரது உடலை வீட்டுத் திண்ணைக்கு கொண்டுவந்து கிடத்தியிருந்தார்கள். எனது குழந்தைமையின் அனைத்துச் சந்தோஷங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த அம்மாச்சி வீட்டின் மீது முதன்முதலாக மரணத்தின் சாயல் படிவதை என்னால் சீரணிக்கவே முடியவில்லை. அதுவரை உள்ளுக்குள் கொஞ்சமாய் ஒட்டியிருந்த பாசமும் ஈரமும் காய்ந்துபோய் மாமா மீது வெஞ்சினம் எழுந்தது. ஆனால் சின்ன அம்மாச்சி மார்பில் அடித்துக் கொண்டு “சாகுற மனுசனாடா அவரு? கொன்னுட்டியேடா. நீ நல்லாவே இருக்கமாட்டடா” என்று கதறியவாறு மண்ணை வாரி மாமா மீது தூற்றிய கணத்தில் வெஞ்சினம் கரைந்து காணாமல் போனது. “கடவுளே! மாமா நல்லா இருக்கணும்!” என்று மனம் சத்தம் போட்டு அரற்றி அழுதது.
நேரம் நகர நகர சாவு வீட்டுக்கே உரித்தான தொடுகைகளும், ஒலிகளும், மணங்களும், ருசிகளும் அம்மாச்சி வீட்டில் வந்து அமைந்து கொண்டிருந்தன. பறையின் ஒலியும் பெண்களின் ஒப்பாரியும் மனதை ஏதோ செய்தன. மெல்ல எழுந்து கொல்லைப்புறத்திற்குச் சென்றேன். அங்கு நின்ற ஒற்றை நார்க்காய்ச்சி மாமரத்தைப் பார்த்தவுடன் அழுகை முட்டியது. அதிலிருந்து விழும் மாம்பழங்களை விடியற்காலை வயலுக்குப் போகும்முன் எங்களுக்காக தாத்தாப் பொறுக்கி எடுத்து வைத்திருப்பார். அப்போதுதான் கவனித்தேன். தாத்தா தூக்கு மாட்டிக்கொண்ட மாட்டுக் கொட்டகையை நோக்கி அப்பா நடந்து கொண்டிருந்தார். எனக்கும் அவ்விடத்தைக் காண வேண்டுமென்ற ஆவல் உந்தியதால் நானும் கொட்டகையை நோக்கி நடக்கலானேன்.
கொட்டகைக்குள் நுழைந்தபோது நான் கண்ட காட்சி பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. அப்பா முழந்தாளிட்டுக் கைகளைக் கூப்பியவாறு மேலே பார்த்து அழுதுகொண்டிருந்தார். உத்தரத்தில் தாத்தா தூக்கிலிட்டுக் கொண்ட கயிற்றின் ஒரு பகுதி தொங்கிக் கொண்டிருந்தது. மூலையிலிருந்த குலுமைக்குப் பின்னால் நான் மறைந்துகொண்டேன். அதுவரை அப்பா அழுது நான் பார்த்ததே கிடையாது. தன்னைப் பெற்ற தகப்பனின் இறப்புக்குக் கூட ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தாதவர் மாமனாருக்காக அழுவது எனக்குப் புதிதாகவும் வியப்பாகவும் இருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாகக் கொட்டகைக்குள் நுழைந்தார் குப்பாயி அப்பாயி. இவர் தாத்தாவின் அக்கா. திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே கணவனைப் பறிகொடுத்த காரணத்தால் தம்பி வீடே கதி என்று வாழ்ந்தவர். எப்போது பார்த்தாலும் கையில் விளக்குமாறோடுதான் காட்சி அளிப்பார். அதனால் இவரை ‘கூட்டுற அப்பாயி’ என்றுதான் அழைப்பேன். “யாரு பஞ்சுவா? நீ ஏன்பா இங்க வந்து உட்கார்ந்திருக்கே?” என்று அப்பாயி கேட்டவுடன் அப்பா எழுந்து நின்றார். ஆனாலும் அவர் அழுகை நிற்கவில்லை.
Noolvanam, 2023
நீதிபதிகளின் கருத்துகள்
ஆசிரியர் இப்புத்தகத்தில் தொகுத்திருக்கிறார். புத்தகத்தில், ஓர் ஆளுமையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டமும் நினைவில் நீடிப்பதற்கு எத்தகைய வெளிப்பாடுகளும் சூழல்களும் காரணங்களாகின்றன என்பதைக் காண்பது சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவமாக அமைகிறது.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் கிராமமொன்றில் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதரை அவரின் கனவு, முயற்சி, பலம், பலவீனம் எனப் பல்வேறு கோணங்களிலிருந்தும் அணுக முயன்றிருக்கும் அப்பன், காலவொழுக்கில் செல்லாமல் முன்பின்னாக நகர்ந்து சம்பவங்களையும் அனுபவங்களையும் கோத்திருக்கிறது. அதன்வழியாக அபுனைவுக்கான புறவய நோக்கைப் பேணிக்கொண்டே வாசகப் பங்கேற்புக்கும் இடமளித்துள்ளது.
இயல்பான ஆதர்சங்களாகத் தொடக்கத்தில் அமையும் குடும்பப் பெரியவர்களுடன் சிறாருக்குக் காலப்போக்கில் உருவாகும் முரண்களும் குழப்பங்களும் குடும்பம் என்கிற அமைப்புக்குப் பொதுவானவை என்பதால், இந்நூலில் வரும் சாதியுணர்வு போன்ற சிங்கப்பூர்ச் சூழலுக்கு அவ்வளவாகப் பொருந்தாத சூழல்களும்கூட அவற்றின் ‘குடும்ப அமைப்பு’, ‘தலைமுறை இடைவெளி’ போன்ற அடிப்படைப் பொதுத்தன்மைகளால் வாசக ஈடுபாட்டைத் தக்கவைக்கின்றன.
சரளமாகவும் இலகுவாகவும் வாசிக்கும் வகையில், தமிழ் மொழியின் எழுத்து வடிவம், பேச்சு வடிவம் ஆகிய இரு சாத்தியங்களையும் தேவைக்கேற்ப சித்திரிப்பிலும் உரையாடலிலும் கலந்து எழுதப்பட்டுள்ள நூல் என்பதால் உணர்வொன்றி வாசிக்கமுடிகிறது. மேலும், வட்டார வழக்குச் சொற்களும் இடம்பெற்றுள்ளமை மொழிக்கு வளம் சேர்ப்பதாக அமைகிறது.
சாதனையாளர்கள் அல்லது விளிம்புநிலை மனிதர்கள் ஆகியோரின் வரலாறுகளே பெருமளவில் எழுதப்படும் சூழலில், ஒரு சாதாரண மனிதரின் வரலாறு என்கிற வகையில் அப்பன் சிங்கப்பூரிலும் குடும்ப, தனிப்பட்ட வரலாற்றுப் பதிவுகளுக்கான தேவைகளையும் வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், படைப்பாக்க அம்ச அபுனைவுப் பிரிவில் ஒரு புதிய போக்கு தொடர்வதற்கும் வித்திட்டுள்ளது.
Judges' Comments
The author has compiled some memories of her father in 16 short chapters in this book. In the book, it is an interesting reading experience to see what expressions and situations are responsible for the memory of a personality and a particular period.
Appan, who has tried to approach an ordinary man who lived in a village in Tamil Nadu at the end of the last century, from different angles such as his dream, effort, strength, and weakness, has gathered events and experiences by going back and forth instead of a chronological manner. Thereby maintaining an objective view of non-fiction and allowing for reader participation.
Since the conflicts and confusions that arise over time with the elders of the family, which are natural ideals, are common to the institution of the family, even situations that are not very relevant to the Singapore context, such as caste consciousness in this book, sustain the reader's engagement due to their basic commonalities such as 'family structure' and 'generation gap'.
In order to read fluently and easily, the two possibilities of written and spoken forms of the Tamil language are mixed with illustration and dialogue according to the need. Moreover, the presence of regional words enriches the language.
As a layman's history, Appan has pointed to the need and opportunities for family and personal histories in Singapore as well, at a time when histories of achievers or marginalised people are largely written. It has also led to the continuation of a new trend in the creative nonfiction category.
ABOUT THE AUTHOR
அழகுநிலா
அழகுநிலா (புனைவு, அல்புனைவு, கவிதை, குழந்தை நூல்கள் & காமிக்ஸ்) ஆறஞ்சு, சிறுகாட்டுச் சுனை, சங் கன்ச்சில், மொழிவழிக் கனவு, அப்பன் ஆகிய ஐந்து நூல்களை எழுதியுள்ளார். மொழிவழிக் கனவு 2022 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றது. சிறுகாட்டுச் சுனை 2020 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்குத் தகுதிச் சுற்றில் தேர்வானது. சிறுவர்களுக்காக கொண்டாம்மா கெண்டாமா, மெலிஸாவும் மெலயனும், மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும், பா அங் பாவ் ஆகிய நான்கு படப் புத்தகங்களையும் புலனாகாப் புலிகள் என்ற நாவலையும் எழுதியுள்ளார். சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் ‘Beyond Words 2015’ போட்டியில் கொண்டாம்மா கெண்டாமா நூல் வெற்றி பெற்றது. தேசிய கலைகள் மன்றம் – சங்கம் இல்லம் உறைவிடக் கல்வித் திட்டம் 2022-23க்கு உடனுறை எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
Azhagunila
Azhagunila is the author of Oranju, Sirukattu Chunai, Sang Kancil, Appan and Mozhivazhi Kanavu; The latter won the 2022 Singapore Literature Prize. Sirukattu Chunai was shortlisted for the 2020 Singapore Literature Prize. She has also published four picture books and one middle grade novel for young readers. She was a writer-in-residence for the National Arts Council-Sangam House Residency 2022-23.
சிறு குறிப்புகள் அழகுநிலா | Short Notes with Azhagunila
"மனக்கண் வழியே" என்பதற்கு எழுத்தில் உங்கள் அர்த்தம் என்ன?
What does "Mata Hati | 心眼 | Eye of the Heart | மனக்கண் வழியே" mean to you in writing?
எழுதும்போது உதிக்கும் எண்ணங்களையும் உணர்வுகளையும் பாசாங்கில்லாமல் வெளிப்படுத்தும் நேர்மை, கறுப்பு அல்லது வெள்ளையாக மட்டுமே எழுதாத ஒரு சமநிலையான அணுகுமுறை, எனது கதாபாத்திரங்களின் மீதான ஒத்துணர்வு ஆகியவை “மனக்கண் வழியே” எழுத்தில் எனது பார்வையாகும்.
The unvarnished honesty with which I express the thoughts and emotions, a balanced approach that avoids a black-and-white perspective and an empathy for my characters are the meanings of the “Eye of the Heart“ to me in writing.
உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள் அல்லது திடீர் செயல்பாட்டு வெடிப்புகள் உள்ளனவா?
What does your writing process look like? Do you type or write? Are there multiple drafts, long pauses, or sudden bursts of activity?
அ-புனைவு எழுதுகையில் எழுத வேண்டியதை மனதில் தொடர்ந்து பல நாட்கள் அசை போட்டுக்கொண்டிருப்பேன். தொடங்கலாமென்ற நம்பிக்கை வந்தவுடன் பெரும்பாலும் ஒரே அமர்வில் எழுதி முடித்துவிடுவேன். புனைவு எழுதுகையில் முன்தீர்மானங்களற்ற பனிமூட்டமான மனநிலையோடு தொடங்கி எழுத்து என்னை வழிநடத்திச் செல்வதை ஆச்சர்யத்தோடு அவதானித்து தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்வேன். மடிக்கணினியில் தட்டச்சு செய்வது எனது வழக்கம்.
When writing non-fiction, I frequently ponder my ideas for several days. Once I feel confident enough to start, I usually complete the piece in a single sitting. When crafting fiction, I begin with an open and unprejudiced mind, letting the writing lead me and making changes as needed. Typing on the laptop is my usual practice.
உங்கள் வேலை செய்யும் இடம் எப்படி இருக்கும்?
What does your working space look like?
நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் நிரம்பிய எனது வீட்டின் வரவேற்பரையில் தரையில் அமர்ந்து மடிக்கணினியில் தட்டச்சு செய்வேன். அமைதியும் சுத்தமும் எனக்கு மிகவும் முக்கியம். காஃபியின் நறுமணமும் சுவையும் இல்லாமல் என்னால் எழுத இயலாது. எழுத்துச் செயல்பாடு தடைபடும் சமயத்தில் வாசிக்க மிகவும் பிடித்த நூல்கள் சிலவற்றை அருகில் வைத்துக்கொள்வேன்.
Seated on the floor of my luminous and breezy living room, I type away on my laptop. Serenity and cleanliness are paramount to me. The rich aroma and taste of coffee are indispensable to my writing process. When my creativity falters, I keep a selection of my favourite books close at hand for inspiration.
தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் நூலிற்கு 30 வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளில் ஒரு சுருக்கமான உரை உருவாக்கவும்.
Make an elevator pitch for your shortlisted work in 30 words or less.
உங்கள் வாழ்வில் அப்பா என்ற சொல்லுக்கான பொருள் என்ன? அவர் கதாநாயகனா அல்லது சராசரி மனிதனா? உங்கள் வாழ்வில் அவரது பங்கு என்ன? உங்களில் அவர் இருக்கிறாரா? இப்படியான கேள்விகளுக்கு மானசீகப் பதில்களைப் பெற நீங்கள் வாசிக்க வேண்டிய நூல் அழகுநிலாவின் ‘அப்பன்’
What significance does the word “father” hold in your life? Is he a hero or an ordinary man? What role does he play in your life? Does he reside within you? To find answers to these profound questions, you should delve into Azhagunila’s book, “Appan.”
இந்தப் படைப்பை எழுதும்போது ஒரு முக்கியமான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
Could you share a pivotal moment as you were writing this work?
‘அப்பன்’ நூலை எழுதிக்கொண்டிருந்தபோது, தேசிய கலைகள் மன்றம் – சங்கம் இல்லம் 2022-23 உறைவிடக் கல்வித் திட்டத்தின் கீழ் உடனுறை எழுத்தாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் முக்கியமான தருணமாகும்.
I was selected as a resident writer for the National Arts Council - Sangam House Residency Program for 2022-23, which was a pivotal moment occurred while I was writing the book “Appan.
இந்தப் புத்தகத்தை எழுதும்போது உங்களுக்கு நீங்களே ஒரு அறிவுரை கூற விரும்பினால், அது என்னவாக இருக்கும்?
If you could give one advice to yourself when you were writing this book, what would it be?
எழுதும்போது சுய விமர்சனத்தையும், சுய சந்தேகத்தையும் தவிர்.
Avoid self-criticism and self-doubt while writing.