ஒட்டுக்கடை
இந்த நூல், சிங்கப்பூரில், 1960 - 1970 போன்ற காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின், வாழ்வியலை மையமாக வைத்து, எழுதப்பட்ட பத்து சிறுகதைகள். அக்காலத்தில் தமிழகத்திலிருந்து இங்கு வந்தோரின் மனநிலையும், அவர்களின் கடின உடலுழைப்பை பற்றியும்,இங்கு நடந்த இனக்கலவர காலத்தையும், மேலும் , அரசாங்க உரிமம் இல்லலாது தொழில் செய்தோரின் இன்னல்களும், ஆலைகளின் வேலை சிரமங்கள் மற்றும் அக்கால கம்பத்து வைத்திய முறைகள் போன்றவற்றையும் கதை விவரிக்கும்.
Ottukkadai
The 10 short stories in this book relates to the hard life of early migrants from India between 1960-70. It covers the intimidating period during the racial riots, the life of unlicensed hawkers, the difficult working conditions in the new upcoming industries, village medical treatments and many more.
பகுதி | Excerpt - "ஒட்டுக்கடை"
அந்த தெருவில் இருக்கும் ஐந்தடி பாதை ஒட்டுக்கடையை அறியாதவர் இல்லை. அதை சோமுக்கடை என்றே, அந்த கடைக்காரரின் பெயரில் பொதுவாக அழைப்பார்கள். பல காலமாக அங்கு அவர் கடை வைத்து இருந்ததால், பலருக்கும் அவரிடம் நல்ல பழக்கம் உண்டு. அவர் கடையில் இல்லாத பொருள் என்பது அரிது. வெற்றிலை பாக்கு, இன்ஜின் மார்க்கு பீடி, பாக்கெட் உடைக்கப்பட்ட உதிரி, சிகரெட்டுகள், போலோ மார்க்கு, பழ மார்க்கு சுருட்டு, பற்பசை, மிட்டாய் என்று இருக்கும் பொருட்களுக்கு, ஒரு நெடிய பட்டியல் போடலாம். இத்தனையும் சுவரோடு பல்லி போல் ஒட்டிக் கொண்டிருக்கும் மர பீரோவில் எப்படிதான் அடைத்து, கண்ணாடி கதவுகள் கொண்டு பூட்டி வைப்பாரோ! விடியற் காலையில் கடை திறப்பார் சோமு. காலையில் வேலைக்கு போகும் தொழிலாளர்கள் அவசர அவசரமாக அவரிடம் சிகரெட், பீடி மற்றும் சுருட்டு போன்றவற்றை வாங்கிக்கொண்டு ஓடுவார்கள். அங்கு தமிழ் தொழிலாளிகள் அதிகம். அதனால் அவர்களே அவரின் முக்கிய வாடிக்கையாளர்கள். மதியம் கொஞ்சம் தாண்டும் போது கூட்டமும் குறையும். அந்த நேரத்தில், காலையில் கொண்டுவந்த உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பிடுவார். சோறு, கொஞ்சம் ரசம், அல்லது சாம்பார். கடித்துக்கொள்ள இரண்டு மோர் மிளகாய். அவ்வளவு தான். எப்பொழுதாவது அதிசயமாக ஒரு மீன் துண்டு,சோற்றில் பதுங்கி இருப்பதை காணலாம்! விரைவாக உண்ட பின்பு, அவரின் வழக்கமான ஸ்டூலில் அமர்ந்து, சுவரோடு சாய்ந்தபடி சற்று ஓய்வெடுப்பார். மதிய வியாபாரம் மெதுவாக செல்லும். அதுபோன்ற நேரத்தில் ஏர் மெயில் காகிதத்தை கையில் எடுத்து, தமிழகத்தில் வாழும் தன் மனைவிக்கு கடிதம் எழுத தொடங்குவார்.
நலம்....நலமறிய அவா.........
அக்காலத்தில் மனைவி மக்களை தமிழகத்தில் விட்டுவிட்டு, பணம் சம்பாதிக்க பலர் சிங்கப்பூருக்கு கப்பலேறி வந்தனர். முடிந்தவரை சம்பாதித்து மீண்டும் தமிழகம் சென்றோர் பலர். இங்குள்ள தமிழர்களின் சமூக தலைவர்கள், இங்கேயே தங்கி, சிங்கப்பூர் குடியுரிமை பெரும்படி எவ்வளவோ எடுத்துச்சொல்லியும், அதை ஏற்றவர் எண்ணிக்கை, சென்றவரை விட குறைவு. கப்பல் துறைமுகமாம், ஹார்பர் போர்ட்டில், பெரும் பெட்டிகளுடன் கப்பலேறுவோர் காட்சி அன்று சாதாரண நிகழ்வு. சோமுவும் பத்தாண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் வந்தவர்தான். வரும் போது, அவருக்கு முப்பது வயது. தனியாகவே கப்பலேறி வந்து, பலவித வேலைகள் செய்தபின், சிறு முதலீடு போட்டு, இந்த ஒட்டுக்கடையை ஆரம்பித்தார். அவரின் சிக்கனத்தாலும், திறனாலும், அவரின் கடை கொஞ்சம் இலாபத்தில் ஓட ஆரம்பித்து. இரண்டாண்டு கடந்தபின் தமிழகம் சென்று, உறவுமுறையில், தன்னை விட பன்னிரண்டு, வயது குறைந்த பெண்ணை மணம் முடித்துக்கொண்டார். மூன்று மாதம் கழித்து மீண்டும் சிங்கப்பூர் வந்து, பழையபடி ஒட்டுக்கடையில் அமர்ந்து வணிகத்தில் ஈடுபடலானார். இடையில் மூன்று முறை தமிழகம் சென்றும் வந்துள்ளார். இங்கு இருந்தபடியே மனைவிக்கு வாரா வாரம் கடிதம் எழுதுவார். மனைவியின் பதில்கள் யாவும் காதலை விட பணப்பற்றாக்குறை பற்றியே அதிகம் இருக்கும்

ABOUT THE AUTHOR

கி.சுப்பிரமணியம்
.நான் 1951ல் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயது பருவம் தொடங்கி, கம்பத்து வாழ்க்கையில் பயணித்தவன். பின்பு 1958 தொடங்க அன்றைய புக்கிட் பான்ஜாங் வட்டாரத்தின், ஜாலான் டெக் வை, எஸ். ஐ. டி என்ற ஆரம்பகால அரசாங்க வீடமைப்பு வட்டாரத்தில் வாழ்ந்தவன். அந்த வாழ்க்கைப் பயணத்தின்போது, கண்டு, கேட்டு அனுபவித்தவை பல. அதைத்தான் என் கதைகளில் பதித்துள்ளேன். இளம் பருவம் தொடங்கி, ஆனந்த விகடன், கல்கி போன்ற வார இதழ்களின் சிறு மற்றும் தொடர்கதைகளைப் படித்து இன்புற்றதோடு அகிலன். மு. வா ஜெயகாந்தன் போன்றோரின் படைப்புகளைப் படித்து மகிழ்ந்துள்ளேன். அவ்வப்போது மரபு கவிதைகளை நமது தமிழ் முரசு நாளேட்டில் எழுதியபோதும், சிறுகதை எழுத ஒர் ஆறாண்டிற்கு முன்புதான் தொடங்கினேன். இன்னும் அப்பணி தொடர்கிறது.
Krishnasamy Subramaniyam
Krishnasamy Subramaniyam was born in Singapore in 1951. He led a kampung life and subsequently settled in Jalan Teck Whye in 1958. Singapore's early years gave him a lot of exposure in observing the struggles; the racial riots and Indonesian Confrontation memories remain in his mind and seep into his stories. He was a keen reader of the Tamil weekly magazines and novels by well-known authors. His interest to write continues till date.
சிறு குறிப்புகள் கி.சுப்பிரமணியம் | Short Notes with Krishnasamy Subramaniyam
"மனக்கண் வழியே" என்பதற்கு எழுத்தில் உங்கள் அர்த்தம் என்ன?
What does "Mata Hati | 心眼 | Eye of the Heart | மனக்கண் வழியே" mean to you in writing?
உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களையும், காட்சிகளையும், மனோதர்மத்திற்கு கட்டுப்பட்டு அஞ்சாது எழுதுதல்.
To express your thoughts and what you witnessed into writing, which is done in accordance to your conciousness.
உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள் அல்லது திடீர் செயல்பாட்டு வெடிப்புகள் உள்ளனவா?
What does your writing process look like? Do you type or write? Are there multiple drafts, long pauses, or sudden bursts of activity?
நான் காகிதத்தில் எழுதுவதில்லை. கணினியின் மூலம்தான் என் கதைகளை பதிவுசெய்கிறேன். ஓரளவிற்கு பதிவுசெய்து, அதை சேமித்து, மீண்டும் மனதில் புதிய எண்ணங்கள் தோன்றுகையில், தொடர்வது என் வழக்கம்.
I use a desktop computer for my typing. usually the flow of my writing synchronise with my thinking. sometimes new thoughts will cross the path according to the emotion.
உங்கள் வேலை செய்யும் இடம் எப்படி இருக்கும்?
What does your working space look like?
தனி அறை ஒன்றில், எழுத மேசையும் சில நூல்களும் உள்ளன.
It's my room. I have a table and a library of books beside.
தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் நூலிற்கு 30 வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளில் ஒரு சுருக்கமான உரை உருவாக்கவும்.
Make an elevator pitch for your shortlisted work in 30 words or less.
எந்த ஒரு நாடும் தனது வரலாற்று நிகழ்வுகளை மறந்தோ மறுத்தோ உயர்தல் அரிது. நாட்டின் வளர்ச்சிக்கான போராட்டத்தை வரலாற்று கட்டுரையாக பதிவிடுவதை விட கதைவடிவில் சொல்வது மேன்மையானது.
No nation progresses by shunning its past history. The struggles of the past told in a story form outbeats even a history book.
இந்தப் படைப்பை எழுதும்போது ஒரு முக்கியமான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
Could you share a pivotal moment as you were writing this work?
இளையர்கள் நம் நாட்டின் ஆரம்பகால தகவல்களை விரும்பி, கணினியில் தேடுவதை கண்டபின் இதை எழுதும் பொழுது ஊக்கத்தை கூட்டியது.
When I witnessed many from the young generation display their interest in searching more about early Singapore in the net, it increased my feelings to keep writing.
இந்தப் புத்தகத்தை எழுதும்போது உங்களுக்கு நீங்களே ஒரு அறிவுரை கூற விரும்பினால், அது என்னவாக இருக்கும்?
If you could give one advice to yourself when you were writing this book, what would it be?
மனதில் தோன்றும் கருத்துகளை, மற்றவர் விமர்சனத்திற்கு பயந்து குறைத்துவிடாது எழுதவேண்டும்.
I felt that the outpour of feelings should not be edited fearing criticisms from others.