காற்றலையில்
“காற்றலையில்” சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூரின் பல முகங்களையும் கலாச்சார பின்புலங்களையும் சமகால வாழ்வியல் சிக்கல்களையும் காட்சிப்படுத்துவதோடு மனிதர்களின் உயிர்துடிப்புகளையும் ஆழமான ஏக்கங்களையும் பிரதி எடுத்துக்காட்டும் கலைத்தன்மையுடனும் படைக்கப்பட்டுள்ளது. கதைகள் குடும்ப சூழலுக்குள் உள் நுழைந்து நல்ல படிப்பினைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் வாழ்க்கை அனுபவத்திலிருந்து எழுதப்பட்டுள்ளன. நவீன கூறுகளை உள்ளடக்கியதாகவும் வாசக இடைவெளியுடனும் எழுதப்பட்டுள்ளன.
Kaatralalyll
The collection of stories in Kaatralalyll showcases various aspects of Singapore, including its diverse facets, cultural backgrounds, contemporary lifestyle challenges, and the profound expressions of human emotions, interwoven with artistic subtlety. These stories delve into life experiences, drawing from within family environments, to present positive narratives.
பகுதி | Excerpt
நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு கீழே ‘சீஷெல்’ பூங்கா இருக்கு. அதில் தங்களின் பிள்ளைகளின் வீட்டிற்கு வந்திருக்கும் பெற்றோர்கள் மெதுநடை, உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கும் போதெல்லாம், வெளியூர் பயணம் இல்லாதபோது அம்மா அப்பாவை இங்க கூட்டிட்டு வந்து வச்சிக்கணும். வெளியில கூட்டிட்டுப் போய்ச் சுற்றி காண்பிக்கணும். அப்பாவுக்கு அம்மா கைபக்குவம்தான் பிடிக்கும். அம்மா நல்லா சமைக்கவும் செய்வார். வித விதமாக சாப்பிடவும் விரும்புவார். சிங்கப்பூருல கிடைக்கிற சாப்பாடு வகைங்க வேறெங்கியும் இருக்குமான்னு தெரியாது. அதையெல்லாம் அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்து அந்த மகிழ்ச்சியை பார்க்கணும்ன்னு நினைச்சிருந்ததெல்லாம் கற்பனையாவே போயிட்டு. திடீரென்று அம்மாவுக்கு கடுமையான முடக்குவாதம் வந்து அவரைப் படுக்கையில் தள்ளியதால் எதையுமே நினைவாக்க முடியவில்லை. “நான் பார்க்கிறத ரசிக்கிறத அம்மாவும் பாக்கணும் ரசிக்கணும்னு ஆசைப்படுறேன்பா” என்று சொன்ன அவரின் உணர்வு புரிந்ததால் நீங்களாவது வாருங்கள் என்று சொல்லி அவரைக் கட்டாயப்படுத்த முடியவில்லை. கடந்த எட்டு மாதங்களாக வீட்டிலிருந்துதான் வேலை. இன்னும் கொஞ்ச மாதங்களுக்கும் இதேநிலைதான். அம்மா அப்பாவ பார்த்து நாளாச்சு. ஏக்கமாதான் இருக்கு. ஊருக்குப் போகலாம் என்றால் “எம்ப்ளாய்மென்ட் பாஸ்”ல இருக்கிறவங்க போனா திரும்பி வரதுக்கு விசா பிரச்சினை. எங்க அலுவலகத்திலேயே சிலர் ஊரில் மாட்டிக்கொண்டு சம்பளமில்லாமல் விடுமுறையில் இருக்கிறார்கள். சிலருக்கு வேலையே போய்விட்டது. எனக்கும் அலுவலக நண்பர்களைத்தவிர வேறு யாரையும் தெரியாது. பேசாமல் ஊருக்கே போய்விடலாம் என்கிற யோசனை கூட வந்துட்டு. அப்பாக்கிட்ட சொன்னதுக்கு “போனது போயிட்ட கையில நாலு காச சேர்த்துகிட்டு வா. எங்களைப்பத்தி கவலைப்படாதே. என்னதான் நம்ம நாட்டைப்பத்தி கொற சொன்னாலும் இங்கவுள்ள வசதி வாய்ப்பு எங்கையும் கிடையாது”ன்னு சொல்லிட்டார். மனம் வறண்டு போய் இருக்கும் இந்நேரத்தில் அவருடன் பேசிக்கொண்டே நடந்தது எனக்கு அப்பாவுடன் செல்வதுபோல இருந்தது. ஏழு மணிக்கு ஒரு மீட்டிங். அது இரவு எத்தனை மணிவரை செல்லும் என்றும் தெரியாது. அதனால் வழக்கமான நேரத்தைவிட சீக்கிரமாகக் கிளம்பியது நல்லதாய்ப் போயிற்று. அவருடைய தாத்தா ராஜூலா கப்பலில் அவர் அப்பாவுடன் சிங்கப்பூருக்கு வந்தது, அவர்கள் ஒரு கடையில் வேலை பார்த்தது, ஓரிரு முறை ஊருக்குப் போனது, இராணுவத்தில் தான் ஆயுதப்படை பிரிவில் இருந்தது என்று பழைய கதைகளை கோர்வையாக சொல்லிக்கொண்டே வந்தார். ‘இதெல்லாம் நல்லா நினைவில் இருக்கே’ என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மனைவி ஜானகியும் நானுமாதான் தினமும் வாக்கிங் வருவோம். என்னவோ இப்போ கொஞ்ச நாளா அவ வர்றது இல்லை. என்னைய விட்டுட்டு எங்கயும் போக மாட்டா ஆனா இப்ப வீட்டுலயும் காணும். எங்கன்னு பையன கேட்டா அவன் என்னவோ சொல்றான். அவளுக்குச் செடின்னா உசிருங்கிறதால வீட்டுல நிறைய செடி வச்சிருப்பா. அதுவும் மல்லிகைச் செடி நிறைய இருக்கும்.
மறதி நோயின் கொடுமை மனைவி இறந்த வலியைக் கூடத் தெரியாமல், பேத்தி நல்லா பாடுவா டான்ஸ் ஆடுவா என்று தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தவரைப் பார்க்க வேதனையாக இருந்தது.
அதற்குள் நாங்கள் “பாசிர் ரிஸ் க்ரெஸ்ட்” உயர்நிலைப்பள்ளி அருகே வந்திருந்தோம். அவர் சொல்வது இந்தப் பள்ளியாக இருக்க வேண்டுமே. பக்கத்தில் என்றால் எப்படியோ யாரையாவது கேட்டு வீட்டை அடையாளம் கண்டு பிடித்து விடலாம் என்று நினைத்துக்கொண்டே “இந்தப் பள்ளிகூடமாப்பா?” என்று கேட்டேன். சற்று நேரம் அதையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார். ‘ஆமாம் தம்பி’ என்று சொல்லவேண்டுமே என மனம் கெஞ்சிக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் தேடிக் கொண்டுபோய் விடுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அவரைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. மாத்திரை ஏதாவது எடுக்கும் நேரம் இருக்கலாம். அதனால் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“பேருந்து நிறுத்தத்தைக் காணுமே!” என்றார். சற்றுத் தள்ளி இருந்த பேருந்து நிறுத்தத்தைக் காண்பித்தேன். “இல்லப்பா நான் சொல்றது இன்னும் பள்ளிகூடத்துக்குப் பக்கத்திலேயே இருக்கும் அதோட இங்க வீடெல்லாம் புளூ கலர்ல்ல இருக்கு” என்று சொன்னவரின் முகத்தில் ஆர்வம் எதிர்பார்ப்பு எல்லாம் கலைந்து ஏமாற்றம் ஏறி அமர்ந்திருந்தது. ‘சே... அவர்தான் ஆரம்பத்துலேயே மெரூன் கலர் கட்டடம்னு சொல்லிட்டாரே. அத மறந்துட்டு பாவம் அவர இவ்ளோ தூரம் நடக்க வச்சிட்டேன். பேசாமல் காவல் நிலையத்திலேயே கொண்டுபோய் விட்டுவிடலாமா?’ எப்படியும் நம்மை வீட்டில் கொண்டு போய் விட்டுவிடுவான் என்ற நம்பிக்கையில் என்னுடன் அரைமணி நேரமாக இருக்கும் அவரை ஏமாற்றவும் மனம் ஒப்பவில்லை. கருநீல ஆடை அணிந்த காவலர்கள் கண்முன் தோன்றித் தோன்றி மறைந்தார்கள்.

நீதிபதிகளின் கருத்துகள்
காற்றலையில் தொகுப்பின் 12 சிறுகதைகளையும் தமிழ்நாட்டு வாழ்க்கை, புலம்பெயர்ந்தோர் கண்களின் வழியாகப் பார்க்கப்படும் சிங்கப்பூர் வாழ்க்கை என இரு பிரிவுகளாகப் பார்க்கமுடிகிறது. இல்லப் பணிப்பெண்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குடும்பச் சிக்கல்கள், கொவிட் பெருந்தொற்று போன்ற சமகாலச் சிங்கப்பூர் வாழ்வின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிக்கல்களை இக்கதைகளின் களன்கள் மையப்படுத்துகின்றன. சில சோதனை முயற்சிகளையும் ஆசிரியர் செய்துபார்த்துள்ளார். எடுத்துக்காட்டாக, குறைவான கதாபாத்திரங்களும் ஒற்றை ஆதார உணர்ச்சியும் கொண்டதாகக் கருதப்படும் சிறுகதை வடிவத்தின் வரையறைகளைச் சோதித்துப் பார்க்கும் ‘சன்னல்’ கதையைக் குறிப்பிடலாம்.
தமிழ்நாட்டிலும் சரி, சிங்கப்பூரிலும் சரி தமிழ்த் திரைப்படங்களின் தாக்கம் தமிழர் வாழ்வில் அதிகரித்தும் தீவிரமாகிக்கொண்டும் வருவதாக ஒரு பொதுவான கருத்து உண்டு. தமிழ்த் திரைப்பட வசனத்தைக்கொண்ட கதைத்தலைப்பு, திரைக்கலைஞர்களை அடிப்படையாகக்கொண்ட உவமைகள் போன்றவற்றால் இத்தொகுப்பு அந்நிலையைப் பிரதிபலித்துள்ளது.
இத்தொகுப்பின் கதைகளில் காணப்படும் ஒருவித எளிமையும் கள்ளமின்மையும் சிங்கப்பூர்ப் புனைவுலகுக்கு ஒரு புதிய குரலை அறிமுகப்படுத்தியுள்ளன. இலக்கிய வாசகர்களுக்கு அக்குரலின் மொழி, கருத்து உள்ளிட்ட அம்சங்களில் அறியாமைகளும் போதாமைகளும் உடனடியாகக் கண்ணில்படும் என்றாலும், ஓர் அறிமுக எழுத்தாளர் தம் எண்ணங்களை எவ்விதப் பாசாங்குகளும் இன்றி வெளிப்படுத்துவது இலக்கியம் என்னும் எழுத்துக்கலையின் வளர்ச்சிக்கு அவசியமாகையால் காற்றலையில் தொகுப்பு கவனம் பெறுகிறது.
சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2024இல், ‘சிறந்த அறிமுகம்’ என்னும் புதிய விருது அறிமுகமாகியுள்ளது. முதன்முதலாக அவ்விருதை காற்றலையில் பெறுகிறது. தொடர்ந்து மேன்மேலும் சிறப்பான, காலச்சூழல் பொருத்தமுள்ள புனைவுகளை எழுத எழுத்தாளருக்கு வாழ்த்துகள்!
Judges' Comments
The anthology Kaatralalyll is a collection of 12 short stories divided into two sections: life in Tamil Nadu and life in Singapore, as seen through the eyes of immigrants. These stories explore various facets of contemporary Singaporean life, such as the experiences of domestic helpers, foreign workers, family dynamics, and the impact of the Covid-19 pandemic. The author also ventures into experimental storytelling. For instance, the story “Sannal” (Window) pushes the boundaries of the short story form, which is traditionally characterised by a limited number of characters and a singular emotional focus.
There is a growing consensus that the influence of Tamil films on the lives of Tamils in both Tamil Nadu and Singapore is becoming increasingly pervasive. This collection subtly reflects that influence, evident in elements such as the title of a story derived from a popular dialogue in a Tamil film, and the creation of new parables inspired by Tamil movie actors and actresses.
The stories in Kaatralalyll are marked by a certain simplicity and authenticity, introducing a fresh voice to Singaporean fiction. While the occasional lapses in language and conceptual clarity may be apparent to more seasoned readers, the collection stands out because it represents the genuine expression of a debut writer unburdened by pretensions.
This year, the Singapore Literature Prize 2024 introduced a new award for Best Debut, and Kaatralalyll is its inaugural recipient. Kudos to the author for this achievement, and here's to many more impactful works in the future!
ABOUT THE AUTHOR

தமிழ்ச்செல்வி இராஜராஜன்
தமிழ்ச்செல்வி இராஜராஜன் திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் பிறந்தவர். சிங்கப்பூர் நிரந்தரவாசியான இவர் கடந்த பத்தாண்டுகளாக சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது படைப்புகள் பல சஞ்சிகைகளிலும் நாளிதழ்களிலும் இணைய இதழ்களிலும் வெளி வந்துள்ளன. தேசிய கலைகள் மன்ற ஆதரவில் நடைபெறும் ‘தங்கமுனை பேனா விருது 2021’ போட்டியில் சிறுகதைப் பிரிவில் இவருடைய "சன்னல்" என்கிற சிறுகதை முதல் பரிசைப் பெற்றது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவு, தாய்மொழிகள் துறை ஏற்பாடு செய்யும் "நானும் ஒரு படைப்பாளி" என்னும் சிறுகதைப் பயிலரங்குகளை நடத்தியுள்ளார். "காற்றலையில்" இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு நூலாகும்.
Tamilselvi Rajarajan
Tamilselvi Rajarajan has been writing short stories for the past decade. A Singapore permanent resident, her works have been published in various mediums including magazines, newspapers, and online. Her story "Sannal" won first prize in the short story category of the 2021 Golden Point Award. Additionally, she conducts workshops for secondary school students, focusing on Short story writing skills.
சிறு குறிப்புகள் தமிழ்ச்செல்வி இராஜராஜன் | Short Notes with Tamilselvi Rajarajan
"மனக்கண் வழியே" என்பதற்கு எழுத்தில் உங்கள் அர்த்தம் என்ன?
What does "Mata Hati | 心眼 | Eye of the Heart | மனக்கண் வழியே" mean to you in writing?
"மனக்கண் வழியே" என்பது வெளிப்படையான நிகழ்வுகளை மட்டும் பார்க்காமல் வாழ்க்கையின் அடிப்படையான, உள்ளார்ந்த பொருளை, நுணுக்கங்களைப் பற்றிய பார்வையாகும். இது மக்களின் ஆழ் மன உணர்ச்சிகளையும் உண்மைகளையும் சொல்லப்படாத செய்திகளையும் மனதுக்குள் கற்பனை செய்து வெளிப்படுத்துவது ஆகும்.
“Eye of the heart” is about looking beyond apparent phenomena and exploring the fundamental inner meaning and subtleties of life. It is about the reflection and expression of life experiences, subconscious feelings of people and unspoken messages and truths.
உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள் அல்லது திடீர் செயல்பாட்டு வெடிப்புகள் உள்ளனவா?
What does your writing process look like? Do you type or write? Are there multiple drafts, long pauses, or sudden bursts of activity?
சிறுகதைக்கான முக்கியமான கருவும் முடிவும் என் மனதில் தோன்றியதும் முதலில் தாளில் ஒரு வரைவு எழுதிவிடுவேன். இது என்னுடைய எண்ணங்களை ஒழுங்குபடுத்தவும் கதையோட்டத்தை உருவாக்கவும் உதவுகிறது. பிறகு தான் அதை கணினியில் தட்டச்சு செய்வேன்.
Once I have the main idea and ending of the story, I jot down a rough draft on paper. This initial draft helps me organise my thoughts. Only after this preliminary work do I start typing it out on my laptop.
உங்கள் வேலை செய்யும் இடம் எப்படி இருக்கும்?
What does your working space look like?
பெரும்பாலான நேரங்களில், எங்கள் வீட்டு உணவு மேசையே என்னுடைய வேலை இடமாக இருக்கும். சில சமயங்களில், வரவேற்பறையின் சோபாவில் இருந்தும் வேலை செய்வேன். எனது வரைவுகளும் கிறுக்கல்களும் அடங்கிய ஒரு writing pad- ம் பேனாவும் எப்பொழுதும் மடிக்கணினிக்கு பக்கத்தில் இருக்கும்.
Most of the time, our dining table is my working space. Sometimes, I work from the living room sofa. A writing pad and pen, along with my drafts and scribbles, are always beside my laptop.
தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் நூலிற்கு 30 வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளில் ஒரு சுருக்கமான உரை உருவாக்கவும்.
Make an elevator pitch for your shortlisted work in 30 words or less.
இத்தொகுப்பு சிங்கப்பூரின் பண்பாட்டு பண்புகளையும் நவீன கால சவால்களையும் மனித உணர்ச்சிகளையும் நுணுக்கமாக காட்டுவதோடு வாசகர்களுக்கு சிங்கப்பூர் கலாச்சாரத்தைப்பற்றிய பார்வையையும் வாழ்க்கையின் ஆழமான புரிதலையும் காட்டுகிறது.
This collection showcases Singapore's cultural traits, modern challenges, and human emotions, providing readers with a perspective on culture and an understanding of life in Singapore.
இந்தப் படைப்பை எழுதும்போது ஒரு முக்கியமான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
Could you share a pivotal moment as you were writing this work?
காற்றலையில் உருவாக்கத்தின் போது மனவோட்டத் தடையை எதிர்கொண்டு கடந்ததுதான் முக்கிய தருணமாகும். சில சமயங்களில் வார்த்தைகள் வராது தேங்கிய நிலை ஏற்படும். அதனால் நூல் உருவாக்க பணிகளின் முன்னெடுப்புகள் மெதுவடைந்தன. அந்நேரங்களில் சற்று விலகி ஓய்வெடுத்து பிறகு என்னை நானே ஊக்கப்படுத்திக்கொண்டு இச்சவாலைக் கடந்து இந்நூல் வெளியீடு கண்டது.
Facing and overcoming writer's block was a pivotal moment in writing "Kaatralayil." There were times when the words wouldn't come, and progress slowed down significantly. Finding ways to push through these blocks, whether through simply taking a break, taught me resilience and renewed my passion for the project.
இந்தப் புத்தகத்தை எழுதும்போது உங்களுக்கு நீங்களே ஒரு அறிவுரை கூற விரும்பினால், அது என்னவாக இருக்கும்?
If you could give one advice to yourself when you were writing this book, what would it be?
தொடர்ந்து வாசிக்க வேண்டும். எழுத வேண்டும்.
Always keep reading and always keep writing.